Friday 17 April 2015 | By: Menaga Sathia

இலை வடாம் / ILA VADAM | SUMMER SPL | VADAM RECIPES

print this page PRINT IT
இலை வடாம் போடுவதற்கு வெயிலில் காய வைக்க அவசியமில்லை..வீட்டினுள்ளே வெயில் படும் இடத்தில் காற்றோட்டமாக உலரவைத்த பின் 1 நாள் முழுக்க வெயிலில் காயவைத்து பயன்படுத்தலாம்.

இதற்கு தனியாக அச்சு இருக்கு,ஆனால் நான் சிறிய தட்டுகளில் ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்தேன்.தட்டு அல்லது வாழையிலை பயன்படுத்தலாம்.

சிறிய தட்டுகளில் மாவினை உற்றும் போது எண்ணெய்+தண்ணீர் கலந்து தடவி ஊற்றவும்.எண்ணெய் மட்டும் தடவி மாவு ஊற்றினால் தேய்க்க முடியாது.

அதே போல் மாவு பதம் தோசை மாவினை விட தண்ணியாக இருக்க வேண்டும்.மாவினை தட்டில் ஊற்றும் போது மெலிதாக தேய்க்கவேண்டும்.தடினமாக மாவினை உற்றினால் காய்வதற்கு லேட்டாக ஆகும்.

ஆவியில் வேக வைத்தபின் துணியில் வைத்து இடைவெளி விட்டு உலரவிடவும்.பின் 4 மணிநேரத்திற்கு பிறகு மறுபக்கம் திருப்பி உலரவிடவும்.

ஜவ்வரிசி சேர்த்தும்,சேர்க்காமலும் செய்யலாம்.இந்த வடாம் எண்ணெயில் பொரிக்கும் போது மிக பெரிதாக இருக்கும்.அதனால் சிறிய தட்டுகளில் உற்றி செய்யலாம்.

நான் மொத்தம் 6 சிறிய தட்டுகளில் செய்தேன்.3 தட்டு ஊற்றி எடுத்த பின் மற்ற 3 தட்டுகளில் ஊற்றி எடுத்தேன்,அதற்குள் முதலில் ஊற்றிய தட்டுகளில் இருந்து வடாம் ஆறி அழகாக எடுக்க வரும்.

மாவு சரியாக வேகவில்லை எனில் வடாம் எடுக்க வராது,பிய்த்துக் கொள்ளும்.

எப்போழுதும் வடாமிற்கு உப்பினை குறைவாக சேர்க்கவும்,எண்ணெயில் பொரித்து சாப்பிடும் போது சரியாக இருக்கும்.

தே.பொருட்கள்

பச்சரிசி -1 கப்
ஜவ்வரிசி- 2 டேபிள்ஸ்பூன்
சீரகம்- 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய்- 4 (அ) காரத்திற்கேற்ப‌
உப்பு -தேவைக்கு
பெருங்காயத்தூள்- 1/4 டீஸ்பூன்
எலுமிச்சைசாறு -1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*பச்சரிசி+ஜவ்வரிசியை ஊறவைத்து நைசாக அரைக்கவும்.

*அதனுடன் அரைத்த பச்சை மிளகாய் விழுது+உப்பு+பெருங்காயத்தூள்+சீரகம் +எலுமிச்சைசாறு சேர்த்து தோசைமாவினை விட நீர்க்க
கரைக்கவும்.

*எண்ணெய்+நீர் சேர்த்து கலந்து கிண்ணத்தில் வைக்கவும்.

*இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் இட்லி தட்டு வைக்கவும்.

*அதன்மீது எண்ணெய் தடவிய சிறிய தட்டுகளில் மாவினை ஊற்றி ஆவியில் 1- 2 நிமிடங்கள் வேகவைக்கவும்.

*ஆறியதும் எடுத்து துணியில் உலரவைக்கவும்.

*வீட்டிலயே வெயில் படும் இடம் அல்லது பேன் காற்றில் 2 -3 காயவைத்து எடுக்கலாம்.ஆனால் இடையிடயே திருப்பி விட்டு உலரவிடவும்.

*பின் நன்றாக வெயிலில் 1 நாள் காயவைத்து பயன்படுத்தலாம்.

பி.கு
*ஒவ்வொரு முறையும் மாவினை தட்டில் ஊற்றும் பொது எணெய் தடவ அவசியமில்லை.

*எலுமிச்சை சாறுக்கு பதில் மாவினை முதல்நாளே அரைத்து புளிக்கவைத்து பயன்படுத்தலாம்.
*மிதமான சூட்டில் எண்ணெய் காயவைத்து வடாமை பொரிக்கவும்,இல்லையெனில் சிவந்து விடும்.



3 பேர் ருசி பார்த்தவர்கள்:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

செய்முறை விளக்கத்துடன் அசத்தி விட்டீர்கள் நிச்சயம் செய்து பார்க்கிறோம் குறிப்பு எடுத்தாச்சி.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

great-secret-of-life said...

wow! u made it so perfectly..

Mullai Madavan said...

Beautifully made, how did you manage to make it in your place?

01 09 10